Fri, Jun 26, 2026 06:42 PM

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி FM 90.8 MHz

Posted by admin on 22-06-2026


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சமுதாய வானொலி FM 90.8 MHz

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஒரு பண்பலை வானொலி செயல்பட்டு வருகிறது. அழகப்பா பல்கலை சமுதாய வானொலி FM 90.8 MHz எனும் பெயரில் இந்த வானொலி இயங்கி வருகிறது.  ஒரு 30 வினாடி ரீவ்ஸ் பார்த்தாலே அதிலும் விளம்பரம் என்று உள்ள சூழலில், வணிக நோக்கமோ விளம்பரங்களோ இன்றி கல்வி, சுகாதாரம், அறிவியல், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகள், விளையாட்டு, சர்வதேச நிகழ்வுகள், அக்கம் பக்கம் நிகழும் அன்றாட அப்டேட்கள், குழந்தைகளுக்கான கதைகள், பட்டிமன்றங்கள், சூழலியல் விழிப்புணர்வு, விவசாயம் எனப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இந்த வானொலியின் ஒலிபரப்பு 15 கிலோமீட்டர் சுற்றளவு வரை காலை எட்டு மணி முதல் மாலை 6 மணி வரை கேட்கலாம். மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்து சமூகத்தின் குரலாக ஒலித்துக் கொண்டுள்ளது. தற்போது ஜூன் 19 முதல் ஜூலை 19 வரை தேசிய வாசிப்பு மாதமாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் வாசிப்பை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு அரசு, தனியார் அமைப்புகள் நடத்தி வருகின்ற நிலையில் அழகப்பா பல்கலை சமுதாய வானொலியும் நம் காரைக்குடி பகுதியில் சிறார்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரையும் பங்கேற்க அழைத்துள்ளது. இதன் தொடக்கமாக 19/06/2026 அன்று அழகப்பா பல்கலை சமுதாய வானொலி நிலையத்தில் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, ரீடத்தான் லிங்க்விஸ்டிக்ஸ் அகாடமி, கவிமணி குழந்தைகள் சங்கம், மரப்பாச்சி இலக்கிய வட்டம் போன்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவளும் கலந்து கொண்டு வாசிப்பைப் பரவலாக்கும் முன்னெடுப்புகளைக் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இந்நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தேர்வாணையர் பேராசிரியர் ஜோதிபாசு, அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் மற்றும் புனர்வாழ்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் சுஜாதா மாலினி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  ராஜபாண்டியன், ரீடத்தான் அகாடமி தலைவர்  சிவகாமி, சிறார் எழுத்தாளர் பால் சாகித்ய புரஸ்கார் விருதாளர் முனைவர் தேவி நாச்சியப்பன், சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளரும் ஆயுர்வேத மருத்துவருமான சுனீல் கிருஷ்ணன், வாசிப்பில் ஆர்வம் கொண்ட பல்வேறு பள்ளி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள், வானொலி நேயர்கள் ஆகியோருடன் இந்த வாசிப்பு இயக்கத்தை குறித்து அழகப்பா பல்கலை சமுதாய வானொலி இயக்குநர் முனைவர் சுமதி உள்ளிட்டோர் கலந்துரையாடல் நிகழ்த்தினர். அனைவரும் பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்வில் வாசிப்பு குறித்த உரையாடல்கள், தாங்கள் வாசித்த புத்தகங்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுத்தாளர்கள் குறித்த பதிவுகளைப் பகிர  81899 60221  என்ற வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பதிவுகளை ஒலிப்பதிவாக வழங்கலாம் என்று தெரிவித்தார்.

Share: 389 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.