Fri, Jun 26, 2026 06:43 PM

அரசு விடுதிகளில் சேருவதற்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்

Posted by admin on 06-06-2026


அரசு விடுதிகளில் சேருவதற்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்

பள்ளி, கல்லூரி  / பாலிடெக்னிக் / ஐடிஐ ஆகியவைகளில் பயிலும், பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் 
மற்றும் சிறுபான்மையினர் மாணவ மற்றும் மாணவியர்கள்,  அரசு விடுதிகளில்          சேருவதற்கு,  தகுதிகளின் அடிப்படையில்  விண்ணப்பித்து பயன் பெறலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர்   கா.பொற்கொடி, தகவல்.
*****

தமிழ்நாடு அரசால் சிவகங்கை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ மற்றும் மாணவியர்களுக்கென  மொத்தம் 42  விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.  அதில், 21 பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளும், 11 பள்ளி மாணவியர்களுக்கான விடுதிகளும், 05 கல்லூரி  மாணவர்களுக்கான விடுதிகளும், 05 கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12  ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ / மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக்  படிப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

மேலும், விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அதில், அனைத்து விடுதி மாணவர் / மாணவியர்களுக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் / மாணவியர்களுக்கு    4 இணைச்சீருடைகளும் தைத்து  வழங்கப்படும்.  10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் / மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET / JEE நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டி நூல்கள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.  

விடுதிகளில் சேருவதற்கு  பெற்றோர்  / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி 
நிலையத்தின் தொலைவு மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தொலைவு தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.     
    
தகுதியுடைய மாணவ / மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் வாயிலாகவோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்  வருகின்ற 18.06.2026-க்குள்  மற்றும் கல்லூரி விடுதிகளைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்   வருகின்ற  15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ / மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளைப் பெற்று, பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.

Share: 949 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.