Fri, Jun 26, 2026 04:05 PM

தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதாந்திர கூட்டம்

Posted by Admin on 23-06-2026


தேவகோட்டையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதாந்திர கூட்டம்

தேவகோட்டை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தேவகோட்டை கிளையின் மாதாந்திரக் கூட்டம் தலைவர் மருத்துவர் இரா.தா. கணியன் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிளையின் செயற்குழு உறுப்பினர் மருத்துவர் கா. செந்தில்குமார் வரவேற்புரை வழங்கினார். இயக்குனர் இமயம் பாரதிராஜா புகழ் வணக்க அஞ்சலி கவிதைகளை கவிஞர் அரவரசன், கவிஞர் பிரைட், கவிஞர் அ.சந்திரன் ஆகியோர்கள் படைத்தார்கள். 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சிவகங்கை மாவட்டத் தலைவர் பேராசிரியர் பழனியப்பன் கலந்து கொண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா காட்சிப்புலக் கருத்துக்களை எடுத்துரைத்தார். “என் இனிய தமிழ்மக்களே” என்னும் தலைப்பில் இயக்குனர் பாரதிராஜா அஞ்சலி உரையாக காரைக்குடி இராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் முனைவர் கா.செந்தில்குமார் பேசுகையில், நாம் இங்கே கூடியிருப்பது ஒரு மனிதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அல்ல; தமிழ் சினிமாவின் முகவரியை மாற்றியெழுதிய ஒரு சகாப்தத்திற்குப் புகழ் வணக்கம் செலுத்த திரையரங்கின் நான்கு சுவர்களுக்குள், செயற்கை வெளிச்சத்தில் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை, கிராமத்து மண்பாதைகளுக்கும், நெல் வயல்களுக்கும், ஓடைக்கரைகளுக்கும் கூட்டிச் சென்றவர் நம் இயக்குனர் இமயம் பாரதிராஜா, தமிழ் சினிமா ‘ஸ்டுடியோ’க்களை மட்டுமே நம்பியிருந்த காலத்தில், கேமராவைத் தூக்கிக்கொண்டு கிராமத்து மண்ணில் கால் பதித்தார். மாடு செத்தா மாட்டுத் தோல்... மனுஷன் செத்தா?" என்று பாலுதேவர் பேசும் ஒரு வசனம், நூறு மேடைப் பேச்சுகளுக்குச் சமம். சாதி என்பது பிறப்பால் வருவதல்ல, சிந்தனையால் வருவது என்பதை ‘பாலுதேவர்’ மற்றும் ‘சங்கரன்’ பாத்திரங்கள் மூலம் மிக ஆணித்தரமாக உணர்த்தினார். சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் விட மனிதநேயமே பெரிது என்பதை உரக்கச் சொன்னார்.

பாரதிராஜா உடலால் நம்மை விட்டுப் பிரிந்திருக்கலாம். ஆனால், அவர் தமிழ் மண்ணில் விதைத்த ‘மண்வாசனை’, தமிழ் சினிமா இருக்கும் வரை, தமிழினம் வாழும் வரை மாறாது. தமிழ் சினிமாவின் இலக்கணத்தை மாற்றியமைத்த அந்தப் ‘புதுமைப் பித்தன்’, ‘வேதம் புதிது’ செய்த மாமேதை, நம் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா நினைவுகள் என்றும் தமிழ் மண்ணில் நீங்கா இடம் பிடித்திருக்கும். நிறைவாக கிளையின் செயலாளர் முனைவர் கோ.தர்மராஜ் நன்றி உரை கூறினார். கிளையின் பொருளாளர் இரா.மேகலா முருகன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முனைவர் கரு. முருகன். தோழர் காமராஜ், மருத்துவர் ஜெயக்குமார், பேராசிரியர் கார்த்திக், பேராசிரியர்கள் முனைவர் வெண்ணிலா, ஆசிரியர் திருமதி சங்கீதா மற்றும் பல கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share: 584 Views

மேலும் படிக்க

Leave a Comment

Your comment will be visible after admin approval.